அஜீத்துக்கு ரூ 50 கோடி சம்பளம்... இது ஏ எம் ரத்னத்தின் நன்றிக் கடன்!
சென்னை: பெரும் சரிவிலிருந்து தன்னை மீட்ட அஜீத்துக்கு நன்றிக் கடனாக, வரும் 2015-ல் அவர் நடிக்கும் படத்துக்கு சம்பளமாக ரூ 50 கோடியைத் தரவிருக்கிறாராம் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம்.
தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏஎம் ரத்னம், திடீரென அதல பாதாளத்துக்குப் போய்விட்டார். தொடர் தோல்விகள் அவரை பெரும் கடனாளியாக்கிவிட்டது.
அவர் யாரை வைத்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தாரோ அந்த ஹீரோக்கள் கூட ரத்னத்தை கண்டு கொள்ளவில்லை.
விஜய்யை வைத்து குஷி, கில்லி என இரண்டு மெகா வெற்றிப் படங்கள் தந்தவர் ரத்னம். இந்தப் படங்கள்தான் விஜய்யை பெரிய நாயகனாக்கின. பல முறை ஏ எம் ரத்னம் கேட்டும் கூட ரத்னத்துக்கு உதவ விஜய் முன்வரவில்லை.
செய்வதறியாமல் திகைத்து நின்ற நேரத்தில் தானாக வந்து தோள்கொடுத்து ரத்னத்துக்கு உதவியவர் அஜீத். அதன்பிறகு உருவான படம் தான் ஆரம்பம். இந்தப் படத்தால் சரிவிலிருந்த முற்றிலும் மீண்டார் ரத்னம்.
அடுத்து அவரே எதிர்ப்பார்க்காத ஒரு அதிசயம். மீண்டும் ஒரு படம் தயாரிக்க ரத்னத்துக்கு கால்ஷீட் தருவதாகவும் கவுதம் மேனன் அதை இயக்குவார் என்றும் அஜீத்தே அறிவிக்க, இதோ அந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் முடிந்ததும், அஜீத் அடுத்து வேறு தயாரிப்பாளருக்கு ஒரு படம் செய்கிறார். அதற்குப் பிறகு மீண்டும் ரத்னத்துக்கே படம் செய்து தருவதாக வாக்களித்துள்ளாராம் அஜீத்.
அந்தப் படம் 2015-ல் தொடங்கும் என்றும், அந்த படத்துக்காக அஜீத்துக்கு ஐம்பது கோடி சம்பளம் தரப் போவதாகவும் ஏஎம் ரத்னம் கூறியுள்ளார்.
தனக்கு ஆபத்பாந்தவனாக வந்த அஜீத்தை கவுரவப்படுத்தும் வகையில் இந்த பெரிய சம்பளத்தை அஜீத்துக்கு அளிக்கப் போவதாக ரத்னம் தெரிவித்துள்ளார்.
அப்படிப் பார்த்தால் ரஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் பெறும் நடிகர் அஜீத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: